மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் வரும் அக்.2 முதல் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று (ஆக.24 – திங்கட்கிழமை) கூடியது. இதில் பேரவையின் 110 விதியின் கீழ் மூன்று முக்கிய அறிவிப்புகளை முதல் விஜய் அறிவித்தார்.
குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும் என்றும், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.
மகளிர் கட்டணமில்லா பயணம் விரிவாக்கம்
“ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் மற்றும் சமூக வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளாலும் அளவிடப்படுகிறது. மகளிரின் பயணச் சுதந்திரம், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது.
தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
Advertisement
அதன்படி, முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. ‘வெற்றிப் பயணத் திட்டம்’, இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
இதன்மூலம், மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன்மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.
வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்துப் பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு, ஒரு தொழில்முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதிசெய்யும் சமூக முதலீடாகும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், மகளிரின் இயக்கச் சுதந்திரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.
இத்திட்டத்தின்கீழ் திருநரும் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்
‘வெற்றிப் பயணம்’ வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து, குடும்பங்கள் முன்னேறி, சமூகநீதியும் சமத்துவமும் நிலைபெற்று, வளமான வெற்றித் தமிழ்நாட்டை உருவாக்கும் நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன்மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.

