பழம்பெரும் காங்கிரஸ் வாதியான ஏகாம்பரம், பள்ளிப்பட்டு தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவரது நூற்றாண்டு நினைவு விழா பள்ளிப்பட்டில் நேற்று நடைபெற்றது.
சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கலந்துகொண்டு ஏகாம் பரத்தின் படத்தைத் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றியதால்தான் 100 ஆண்டுகள் கடந்தும் ஏகாம்பர ரெட்டி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இளம் தலைமுறை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகாம்பரத்தைப்போல அரசியலில் ஒழுக்கம், சேவை, எளிமையை கடைபிடித்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
ஏகாம்பரம் எம்எல்ஏவாக இருந்த காலத்தில் எம்எல்ஏக்களுக்கு மக்கள் அதிக மரியாதை அளித்தனர். காலப்போக்கில் அது படிப்படியாகக் குறைந்துவிட்டது. இது ஏன் என பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஆராய வேண்டும்.
தமிழகத்துக்கு நீண்ட காலத்துக்கு நன்மை தரக்கூடியவர்களை, மக்களை நல்வழிப்படுத்தும் தலைவர்களை அடையாளம் காணும் தன்மையை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிப்பட்டில் அரசின் சார்பில் அவருக்கு சிலைஅமைக்கவும், திருத்தணி மார்க்கெட் பகுதியில் காந்தி சிலை அமைக்கவும் முதல்வர் பார்வைக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

