தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால். பின்னர், அவர், ”போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சிறைத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. முதல்வர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம். தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

