அரைசதம் விளாசிய ஷெபாலி: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா | Womens T20 WC

Priya
16 Views
2 Min Read

நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்திய அணி. ஷெபாலி வர்மா இந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசினார்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜூவாரியா 33, நிகர் சுல்தானா 32 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது.

ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா இணைந்து இந்திய அணிக்காக இன்னிங்ஸை தொடங்கினர். ஸ்மிருதி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அரைசதம் விளாசிய ஸ்மிருதி, அதற்கடுத்த இரண்டு ஆட்டங்களில் சோபிக்க தவறினார்.

ஸ்மிருதி வெளியேறியதும் யாஸ்திகா பாட்டியா களத்துக்கு வந்தார். அவருடன் இணைந்த ஷெபாலி 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஷெபாலி ஆட்டமிழந்தார். தொடர்ந்து யாஸ்திகா 23, ரிச்சா கோஷ் 10 ரன்களில் வெளியேறினர்.

பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் உடன் இணைந்து கேமியோ இன்னிங்ஸ் ஆடினார் ஜெமிமா. 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் 13, தீப்தி 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்திய மகளிர் அணி, 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது.

இந்திய அணி இந்த தொடரில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசத்தை வீழ்த்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. வரும் 28-ம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணி உடன் இந்தியா விளையாடுகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply