கனிமங்களை வெளி மாநிலம் கொண்டு செல்ல தடை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Priya
604 Views
1 Min Read

தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக் கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக் கற்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் மது பிரேமநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘திருத்த விதிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்குச் சொந்தமானது. அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. மூன்று மாத தடைக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனு தாரரின் கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply