தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான அரசுப் பணியாளர் அமைப்பான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு திமுகவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களுக்கு வழங்கிய எண்ணற்ற சலுகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்பட்டது மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.2,000-லிருந்து ரூ.3,400 ஆகவும், உதவியாளர்களுக்கு ரூ.3,100 ஆகவும் உயர்த்தப்பட்டது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தப் பணப்பலன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள் ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கியதும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாத விடுமுறையை அறிவித்ததும் இந்த அரசின் சாதனைகளாகக் கூட்டமைப்பு கருதுகிறது.
“சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” என்ற முதல்வரின் வாக்குறுதிக்கு ஏற்ப, சத்துணவு பணியாளர்களுக்கு அறிவிக்கப்படாத பல நன்மைகளும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, சுமார் 10 லட்சம் வாக்குகளை திமுகவுக்கு வழங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். எஞ்சியுள்ள கோரிக்கைகளும் அடுத்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும் என்ற முழு நம்பிக்கையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், சத்துணவு பணியாளர்களின் இந்த ஒருமித்த ஆதரவு திமுக கூட்டணிக்குப் பெரும் பலமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ள இந்தக் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள தங்கள் உறுப்பினர்களை திமுகவுக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் ஆதரவு அறிவிப்பு தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

