தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிவடைந்து, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கான நிர்வாகப் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாளை (ஏப்ரல் 29) சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள இந்தப் பயிற்சியில், வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள், கட்டுப்பாட்டு இயந்திரங்களில் (Control Unit) இருந்து முடிவுகளைத் துல்லியமாக எடுப்பது மற்றும் முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் (ஏப்ரல் 30) சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் மற்றொரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தபால் வாக்குகள் (Postal Ballots) மற்றும் தேர்தல் தொடர்பான இதர படிவங்களைப் பராமரிப்பது, அவற்றைச் சரிபார்ப்பது குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்கள் (Micro Observers) மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது எவ்விதத் தங்குதடையுமின்றி, வெளிப்படையான முறையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிகளின் முக்கிய நோக்கமாகும். இந்தப் பயிற்சிகளில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அவர்கள் நுழையும் விதம் மற்றும் பாதுகாப்பு விதிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

