சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வருகிறார். முதலமைச்சரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அவர் செல்லும் நேரங்களில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. இதனால் அலுவலக நேரங்களில் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுவதாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் எழுந்தன.
குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை மற்றும் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். இதனால் அலுவலக நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அவசர சேவைகளுக்குச் செல்லும் மக்கள் நேர தாமதத்தால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி புதிய போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு செல்வதற்காக குறிப்பிட்ட சாலைகளில் தனி பாதை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மற்ற வாகனங்களின் இயக்கம் பாதிக்கப்படாமல் சீராக போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

