திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கருத்து தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பான கண்டன அறிக்கையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்எல்ஏவும் தவெக அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல்குமார் முஷ்டியை மடக்குகிறார், தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பது தான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக் கொடுக்கிறார்.
முருகபக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும், காலும் இப்படி சலங்கைக் கட்டி ஆடிக் கொண்டிருக்க “தலைமை” என்று கூறிக் கொள்ளும் நீங்கள் இதுகுறித்து இன்னும் ஒருவார்த்தைக் கூட பேசாதது ஏன் முதல்வர் விஜய் அவர்களே.? தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், ஒரு சாராருக்கு சாதகமாகவும் இந்துக்களுக்கு எதிராகவும் உங்கள் அமைச்சர்கள் இப்படி வாய் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதற்கா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? தேர்தலுக்கு முன்பு அமைதி காத்துவிட்டு, ஆட்சியமைத்தவுடன் முருகபக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பது தான் தவெகவின் மதநல்லிணக்க அரசியலா?
சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்தை பிரதிபலிக்கும் நீங்கள், உண்மையில் தூயசக்தி அல்ல ஒரு துரோகசக்தி என்று முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

