ஆலங்குளம் அருகே கள் இறக்கிய விவசாயி மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக வெளிநாட்டு மதுகளை விற்பனை செய்யும் போது, உள்நாட்டிலேயே தமிழ்நாட்டின் சின்னமான பனை மரத்தில் உற்பத்தியாகக்கூடிய கள்ளை ஏன் விற்பனை செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியிருக்கிறது.
கள் இறக்கியதாக விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இந்த கேள்வியை அரசுக்கு எழுப்பியுள்ளனர். அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளத்தில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள போது தமிழகத்தில் மட்டும் ஏன் கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு செயல் திட்டத்தை வகுத்து கள் விற்பனைக்கு அனுமதிக்கலாம்; வருமானமும் கிடைக்கும் என்று நீதிபதி கூறியுள்ளார். டாஸ்மாக் வருமானத்தை கள் விற்று ஈட்டலாமே? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. கள்ளில் உள்ள மருத்துவ பயன் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு வழக்கறிகருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தனியாக இருந்த விவசாயியை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் என்ன? காவல்துறையினர் எல்லை மீறி உள்ளனர்; 3 காவலர்களால் ஒரு நபரை பிடிக்க முடியவில்லையா? என்ற கேள்விகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை எழுப்பியுள்ளது. கள்ளிற்கு தடை விதித்து, டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

