வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

Priya
28 Views
2 Min Read

தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (மே 29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே 29) ஓரிரு இடங்களிலும், 30-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 30-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும், 31-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

31-ம் தேதி அதிகபட்ட வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 6 செமீ, சிவலோகத்தில் 5 செமீ, திருப்பூர் மாவட்டம் அவினாசி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, சேலம் மாவட்டம் ஆனைமடுவில் தலா 4 செமீ மதுரை மாவட்டம் எழுமலை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, தூத்துக்குடி விமான நிலையத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply