தமிழக வனத்துறை தலைவராக ஏ.உதயன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். வனத்துறை தலைவராக இருந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி நேற்று ஓய்வுபெற்றார்.
அதனைத் தொடர்ந்து, வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநராக இருந்த முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஏ.உதயன் வனத்துறை தலைவராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1991-ம் ஆண்டு பேட்ச், தமிழக கேடர் இந்திய வனப்பணி அதிகாரியாவார். திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர், தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரிய உறுப்பினர் செயலர், மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
பாம்பு பிடிக்க பயிற்சி
தமிழக வனத்துறையில் பாம்பு பிடிக்கும் ஆபத்தான பணியை மேற்கொள்வோரை அரசு ஊழியர்களாக நியமிக்கவில்லை. வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக இதில் அனுபவம் பெற்ற பழங்குடியின மக்களை நியமித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் அரசு ஏற்படுத்தி கொடுத்தது. இதற்கிடையில் பொதுமக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களும், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வந்தனர்.
உரிய அனுபவமும், கருவிகளும் இல்லாத தீயணைப்பு வீரர்களை பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநராக இருந்த உதயன், தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாம்புகளைப் பிடிப்பது குறித்து பயிற்சி அளித்து, தேவையான நவீன உபகரணங்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

