பவிஷ் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் காதலால் ஏற்படும் மகிழ்ச்சி, வேதனை, இழப்பு மற்றும் பழிவாங்கும் உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள காதல் கலந்த குடும்பப் படம்.
படத்தின் தொடக்கத்தில், ஒரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றதாக பவிஷை போலீஸ் அதிகாரி செல்வராகவன் கைது செய்கிறார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்கத் தலைவர் வனிதா தலைமையில் போராட்டமும் நடக்கிறது. அப்போது போலீஸ் விசாரணையில் தனது காதல் கதையை பவிஷ் சொல்லத் தொடங்குகிறார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாகதுர்காவை நான்கு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலிக்கிறார். காதலிக்காக அவர் கேட்பதெல்லாம் செய்து, தன்னுடைய வருமானத்தை விட அதிகமாக செலவு செய்கிறார். அதற்காக கடன் வாங்கி, சுமார் 15 லட்சம் ரூபாய் கடனில் சிக்கிக் கொள்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள், வேலை இழப்பு, கடன்காரர்களின் தொல்லை என அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
இதற்கிடையில் நாகதுர்கா உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் பவிஷின் கடன் நிலை தெரிந்ததும், நாகதுர்காவின் தாய், போலீஸ் நிலையிலேயே பவிஷையும் அவரது தந்தை கே.எஸ். ரவிக்குமாரையும் அவமானப்படுத்துகிறார். இதனால் பவிஷின் குடும்பமும் அவர்மீது கோபம் கொள்கிறது.
காதலுக்காக எல்லாவற்றையும் இழந்த பவிஷ், தனது வாழ்க்கையை சீரழித்த நாகதுர்காவுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் தான் அனுபவித்த வேதனையை, அடுத்த நான்கு மாதங்கள் அவளும் அனுபவிக்க வேண்டும் என்கிறார். அதற்கு நாகதுர்கா சம்மதிக்கிறார். அதன் பிறகு இருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, காதல் வெற்றி பெறுகிறதா, இறுதியில் யார் தங்கள் தவறை உணர்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
பவிஷ், இளைஞர்களுக்கான கதாநாயகனாக உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக காதலால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வேதனை, குடும்ப பிரச்சினைகள், பின்னர் பழிவாங்கும் மனநிலை ஆகியவற்றை நன்றாக வெளிப்படுத்துகிறார். சில இடங்களில் அவரது நடிப்பிலும் குரலிலும் தனுஷின் சாயல் தெரிந்தாலும், நடனக் காட்சிகளில் தனித்திறமையை காட்டியுள்ளார்.
நாகதுர்கா, கவலை இல்லாமல் செலவு செய்ய வைக்கும் காதலியாகவும், பின்னர் அதற்கான விளைவுகளை சந்திக்கும் பெண்ணாகவும் இயல்பாக நடித்துள்ளார். செல்வராகவன் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. கே.எஸ். ரவிக்குமார், சவுந்தர்யா, ரம்யா மற்றும் வனிதா உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கான பணியை சரியாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவின் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன. பாக்ஸனின் இசையில் ‘வாடி பொட்டப்புள்ள’ ரீமிக்ஸ் பாடல் ரசிகர்களை கவர்கிறது. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் அதிக சத்தமாக இருப்பது குறையாக தெரிகிறது.
திரைக்கதையில் சில சுவாரஸ்யமான தருணங்கள் இருந்தாலும், பல காட்சிகள் நீளமாகவும், மீண்டும் மீண்டும் சண்டை, வாக்குவாதம் இடம்பெறுவதாலும் சலிப்பை ஏற்படுத்துகிறது. காதல், பிரிவு, பழிவாங்குதல் போன்ற அம்சங்கள் 90-களின் படங்களை நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் நாயகன் செய்யும் பழிவாங்கும் செயல்கள் இன்றைய காலத்திற்கு பொருத்தமற்றதாக தோன்றுகின்றன. சில வசனங்களும் பெண்களை ஒரே கோணத்தில் சித்தரிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. உணர்ச்சிகரமான காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ காதலால் ஏற்படும் இழப்புகளையும் அதன் விளைவுகளையும் சொல்ல முயற்சிக்கும் படம். நடிகர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு பலமாக இருந்தாலும், பழைய பாணி திரைக்கதை, பலவீனமான உணர்ச்சிக் காட்சிகள் மற்றும் இன்றைய தலைமுறைக்கு பொருந்தாத அணுகுமுறை ஆகியவை படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன. காதல் படங்களை விரும்புபவர்களுக்கு ஓரளவு ரசிக்கக் கூடிய அனுபவமாக இப்படம் அமைகிறது.

