“ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார்” – செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

Priya
3 Views
1 Min Read

“நான் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக கூறப்படும் விண்ணப்பத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலக தயார். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா?” என்று அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் அவர் கூறியது: “தமிழகத்தில் ஸ்டுடியோ ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் நடத்தி வருகிறது.

சிங்கப்பெண் படை அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், குழந்தைக்கு மருந்து பொடித்துக் கொடுத்ததாக கூறினாலும் அருகில் குழந்தையே இல்லையே.

சட்டப்பேரவை தலைவரின் சில கருத்துகள், நடவடிக்கைகளை வரவேற்கிறேன். ஆனால் ஆதாரமற்ற கருத்துகளை முதலமைச்சர் பேசுவதை சட்டப்பேரவை தலைவர் அனுமதிக்க கூடாது.

முதல்வர் விஜய்யால் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் நண்பர். தமிழக அரசின் திட்டங்களையும் தேவையான நிதியையும் பெற்று தர வேண்டிய இடத்தில் உள்ள டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒருவரை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு கணக்கு சரியாக வராது. பாஜக வாக்கு வங்கி சரிந்துவிட்டதாக கூறுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலைவிட தற்போது 0.8 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இந்தக் கணக்கு கூட தெரியாதவர் வருவாய்த் துறையில் என்ன சாதிக்கப் போகிறார்.

நான் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக கூறப்படும் கடிதம் செங்கோட்டையனிடம் இருந்தால் அதை வெளியிடட்டும். அது உண்மையாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா?

மாணவர்களின் அடையாள அட்டைகளில் சாதி பெயரை குறிப்பிடுவது கண்டனத்திற்குரியது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்கான மரியாதையைகூட இந்த அரசின் அமைச்சர்கள் கொடுப்பதில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply