கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூரிலிருந்து இன்று காலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் தடுப்பு அணையை கட்டி தண்ணீரை தடுத்து, கர்நாடகா மாநிலத்தின் பாசனத்திற்காக பயன்படுத்த உள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரக்கூடிய தண்ணீர் வராமல் தடுத்து நிறுத்தப்படுவதால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும்
எனவே, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மாதாந்திர நீர் பங்கிட்டை வழங்க வேண்டும். இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ராசிமணல் என்ற இடத்தில் அணைகட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நாளை 31-ம் தேதி காலை 10 மணிக்கு மேகேதாட்டு பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
அதற்காக இன்று காலை தஞ்சாவூர் பெரிய கோயில் முன்பாக உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து தங்களது வாகன பேரணியை தொடங்கினர். இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, வழியாக ஓசூர் சென்றடைந்து, நாளை மேகேதாட்டு பகுதிக்கு செல்ல உள்ளனர்.

