“தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” – ஆளுநரிடம் அதிமுக மனு

Priya
145 Views
1 Min Read

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்துவிட்டனர். இதையடுத்து அதிமுகவில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, “குதிரை பேரத்தின் மூலமாக அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை தடுத்த நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஆளுநருக்கு கொடுத்த புகார் மனுவை நாங்கள் கொடுத்துள்ளோம்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தலைமை செயலகத்தையே தவெக கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டனர்” என்று கூறினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிமுக அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குதிரை பேரத்தை தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவினை, இன்று அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்றக் குழு கொறடாவும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ம. தனபால், ஆகியோர், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply