தொகுதி மறுவரையறை விவகாரம் – தென் மாநிலங்களுக்கு ஏற்பட போகும் பாதிப்புகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்…

Priya
10 Views
2 Min Read

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா, இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்த மறுவரையறை அமலுக்கு வந்தால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் தங்களின் அரசியல் செல்வாக்கை பெருமளவு இழக்க நேரிடும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

தெற்கு வீழ்ச்சி – வடக்கு எழுச்சி

வெளியாகியுள்ள தரவுகளின்படி, தற்போதைய நிலவரப்படி மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24.3 சதவீதமாக உள்ளது. ஆனால், புதிய மறுவரையறைக்குப் பிறகு இது 20.7 சதவீதமாகக் குறையும். அதே சமயம், இந்தி பேசும் வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் தற்போதைய 38.1 சதவீதத்திலிருந்து 43.1 சதவீதமாக அதிரடியாக உயரும்.

அதிர்ச்சியூட்டும் ஒப்பீடு:

  • வட மாநிலங்கள்: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 76.8 சதவீதம் வரை உயரும்.
  • தென் மாநிலங்கள்: தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 33.3 சதவீதம் மட்டுமே உயரும்.

இதன் மூலம், வட மாநிலங்களின் அரசியல் அதிகாரம் தென் மாநிலங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும் சூழல் உருவாகியுள்ளது. இது “மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்தியாவிற்கு வழங்கப்படும் தண்டனை” என அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

2011 கணக்கெடுப்பும் – பாஜகவின் மௌனமும்

2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மறுவரையறை செய்யப்படும் என முன்பு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அவசரகதியில் இந்த மசோதாவைக் கொண்டு வர பாஜக திட்டமிடுகிறது.

மிக முக்கியமாக, “மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மாறாது” என பாஜக மேடைகளில் அளித்த உறுதிமொழிகள், தற்போது தயார் செய்யப்பட்டுள்ள மசோதா வரைவில் (Draft Bill) எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் மாநில கட்சிகளின் பெரும் கவலையாக உள்ளது.

அரசியல் சூழ்ச்சியா?

பாஜக வலுவாக உள்ள மாநிலங்களுக்குச் சாதகமாகவும், அக்கட்சி பலவீனமாக உள்ள தென் மாநிலங்களை நாடாளுமன்றத்தில் வலுவிழக்கச் செய்யவும் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஒருவேளை இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவின் எதிர்காலப் பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தி வட மாநிலங்களிடம் மட்டுமே தங்கிவிடும் என்றும், தென் மாநிலங்களின் கோரிக்கைகள் டெல்லியில் எடுபடாமல் போகும் என்றும் அஞ்சப்படுகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply