திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பெரியபாளையத்தில், திமுக வேட்பாளர் கோவிந்தராஜனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் Thirumavalavan இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக அரசியலில் பாஜகவின் வளர்ச்சியை அதிமுக எவ்வாறெல்லாம் மறைமுகமாகத் தூண்டுகிறது என்பது குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.
புதுச்சேரி பாணியில் தமிழகத்தில் பாஜக திட்டம்
புதுச்சேரி மாநில அரசியலை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய Thirumavalavan, “ஒரு காலத்தில் புதுச்சேரியில் அதிமுக 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வலிமையுடன் இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்கு பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது, அதிமுக வெறும் 2 இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவைத் தேய்த்துவிட்டு பாஜக வளர்ந்துள்ளதையே இது காட்டுகிறது. இதே நிலைதான் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்திலும் அதிமுகவிற்கு ஏற்படும்” என்று எச்சரித்தார்.
சங்பரிவார் அரசியலும் அரசியலமைப்புச் சட்டமும்
“பாஜகவினர் முகமூடி அணிந்து கொண்டு வந்து அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்” என்று சாடிய Thirumavalavan, அவர்கள் சராசரி அரசியல்வாதிகள் அல்ல, அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார். சங்பரிவார்கள் தமிழகத்தில் தங்களின் வலதுசாரி அரசியலை நிலைநாட்ட அதிமுக மற்றும் பாமகவின் கைகளைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பாஜகவைத் தனித்து எதிர்க்கும் வலிமை தங்களுக்கு இல்லாததாலேயே, திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பெரியார் அரசியல் காக்கப்பட வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே தமிழகப் பண்பாடு, திருவள்ளுவர் மற்றும் பெரியார் கொள்கைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்த அவர், அதிமுக-பாஜக கூட்டணி வலிமை பெற்றால் பெரியார் அரசியல் வீழ்த்தப்படும் என்றும், அது மறைமுகமாக அம்பேத்கரை வீழ்த்துவதற்குச் சமம் என்றும் கூறினார். முன்னதாக வெறும் பூஜ்ஜியமாக இருந்த பாஜக, இன்று அதிமுகவின் தயவால் 11 சதவீத வாக்கு வங்கியை எட்டியுள்ளது அவர்களின் கண்களையே உறுத்துகிறது. கூட்டணி கட்சிகளுக்குத் துரோகம் இழைப்பதில் பாஜக கைதேர்ந்தவர்கள், எனவே தேர்தலுக்குப் பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என Thirumavalavan தனது உரையை நிறைவு செய்தார்.

