திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி ஆயத்த ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு வர்த்தகம் நடந்து வருகிறது. இதுபோல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் திருப்பூரில் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளின் சுமார் 65 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆடை தயாரிப்புக்கு முக்கிய பங்காற்றுவது பருத்தி நூல் ஆகும். பருத்தி விலையை பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.4000-ரூ.5,500 வரை விலை உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மாதந்தோறும் சிறுக சிறுக சுமார் 61 ரூபாய் வரை நூல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக பருத்தி இறக்குமதி அதிகரிக்க கூடும் என்பதால் நூல் விலை குறையும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. அதில் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம்;
நூல் விலை எப்போதும் நிலையாக இருக்க வேண்டும். விலையை திடீர் திடீரென உயர்த்தும்போது ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

