அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 180 காவல்துறையினருக்கு பதக்கம் – அரசு அறிவிப்பு

Priya
780 Views
2 Min Read

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 180 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள், சார்நிலை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில், தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும், ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 நபர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும் அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கிட முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.

மேலும், 19.05.2026 அன்று காலை சுமார் 09.45 மணியளவில், நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர்.ராஜசேகர் மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி, தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு ”தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். மேற்கண்ட பதக்கங்கள், முதல்வர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply