டெல்லியில் இன்று (ஏப்ரல் 29) நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது முறையாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வருகின்ற மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய அரசுகள் பொறுப்பேற்ற பின்னரே நதிநீர் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். தற்போது இந்த மூன்று மாநிலங்களிலும் அதிகாரிகள் அடங்கிய காபந்து (Caretaker) அரசுகளே செயல்பட்டு வருவதால், மாநிலத்தின் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியாது என்றும், இது கர்நாடகாவிற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் இக்கூட்டம் நடைபெறுவது தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் எனத் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மே 4-ஆம் தேதிக்குப் பிறகு புதிய அரசு அமைந்தவுடன் உரிய ஆலோசனைகளை நடத்தி ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

