“கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்பதை கல்லூரி மாணவர் அமுதன் கொலை உறுதிப்படுத்துகிறது. இது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடகத்தில் அண்மையில் மாடு மேய்க்கச் சென்ற 3 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கிறார்கள். இது மிகுந்த கவலை அளிக்கக் கூடிய ஒன்று. இதனைக் கண்டித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. தொடர்ந்து வனத்துறையினர் தமிழர்களுக்கு எதிரான துப்பாக்கிச் சூடுகளை நடத்துவது அவ்வப்போது நடந்தேறி வருகிறது. ஆகவே, இதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்பதை, இந்த இறப்பு உறுதிப்படுத்துகிறது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.
திருவெற்றியூரிலும் ஒரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கிடையே மோதல் படுகொலை என்பது நடப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. புதிய இளைய தலைமுறை பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு இளைய தலைமுறையினரின் வாழ்வை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர் அமுதனின் பெற்றோரோடு நான் தொலைபேசியில் பேசினேன். அமுதன் எந்த வம்புக்கும் செல்லாத இளைஞன். அவர் போதைப் பொருட்களை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார் என்பதால்தான் அவர் கொல்லப்பட்டதாக அவரது பெற்றோர் உறுதியாகச் சொல்கின்றனர். எனவே, அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, அது உண்மையா இல்லையா என்பதை கண்டறிய வேண்டும்.
தமிழ் தேசியம் என்பது வேறு, தனி நபர்கள் மொழியில் வல்லமை பெறுவது அல்லது பெறாமல் இருப்பது என்பது வேறு. அதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களை அந்தப் பொறுப்பில் இருந்து தள்ளி வைக்க முடியாது. அவர்கள் காலப் போக்கில் சிறப்பாக பேசுகிற வல்லமையைப் பெறுவார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கின்ற பிரச்சினைகளுக்கு முதல்வர் உரிய நேரத்தில் உரிய விளக்கம் கொடுப்பார் என நம்புகிறேன். தவெக அரசின் நூறு நாள் ஆட்சி அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிற ஓர் ஆட்சியாக, எந்தத் துறையிலும் ஊழல் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு, பொதுமக்கள் பாராட்டக்கூடிய அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னுரிமை எனும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு, இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர்கள் கமிஷன் வாங்கத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான ஆதாரம் இருந்தால் அதை முதல்வரிடம், அண்ணாமலை நேரில் சந்தித்து தெரிவுபடுத்த வேண்டியது அவசியமானது. ஆதாரம் இருக்குமேயானால் முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும். தவெக அரசுக்கு எந்த வகையிலும் தீங்கு நேராதபடி ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும்.
எனது பிறந்தநாளையொட்டி எனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், அண்ணன் ஸ்டாலின், வைகோ, முத்தரசன், சண்முகம், ஜி.கே.வாசன், கே.எஸ்.அழகிரி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி. அதேபோன்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள ரஜினிகாந்த்துக்கும் நன்றி” என்று திருமாவளவன் கூறினார்.

