செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும் தமிழ்நாடு : ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்!!

Priya
19 Views
2 Min Read

தமிழகச் சட்டமன்றத்தின் 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20, 2026) பெரும் பரபரப்புடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கம் போலத் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியில் வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவை தயாரித்த ஆளுநர் உரையைச் சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். இந்த உரையில் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, சென்னை செம்மஞ்சேரியில் ரூ. 216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் (Sports City) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் மற்றும் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் திடல்கள் அமையவுள்ளன. மேலும், தமிழகத்தைக் “குடிசை இல்லாத மாநிலமாக” மாற்றும் நோக்கில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

உரையில் இடம்பெற்ற இதர முக்கிய அம்சங்கள்:

  • மெட்ரோ ரயில்: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது ‘மாற்றாந்தாய் மனப்பான்மை’ என விமர்சனம்.
  • மகளிர் நலன்: 1.30 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் (40.3%) தான் அதிகம்.
  • ஜல் ஜீவன் திட்டம்: 1.12 கோடி வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; இதற்கான ஒன்றிய அரசின் நிலுவை நிதி ரூ. 3,112 கோடி இன்னும் வரவில்லை.
  • கல்வி: 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 2,172 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டத்தால் 19 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
  • கொள்கை: தமிழகத்தின் கல்விக் கொள்கை என்றும் ‘இருமொழிக் கொள்கை’ (தமிழ் & ஆங்கிலம்) மட்டுமே என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
Share This Article
Leave a Comment

Leave a Reply