தமிழக மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்துக் குரியது. சொந்தக் கடலில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர் கதையாகிவிட்டது.
பிரதமர் பேச மறுப்பது ஏன்?
அண்டை நாடான இலங்கையிடம் நம் மீனவர்களின் உரிமைக்காக பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்? கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பாஜக அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனை யுமின்றி உடனடியாக விடுவிக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

