33 % மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல்

Priya
11 Views
2 Min Read

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் இடங்களை அதிரடியாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாளை அறிமுகப்படுத்துகிறது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை (நாரி சக்தி வந்தன் அதினியம்) உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

மக்களவை பலம் 850 ஆக உயர்வு

இந்த மசோதாவின் மூலம் இந்திய அரசியலமைப்பின் 81-வது பிரிவு திருத்தப்பட உள்ளது. தற்போது 543 ஆக உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படும். இதில் மாநிலங்களில் இருந்து 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 33 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள மொத்த சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை 4,123-லிருந்து 6,186 ஆக உயர்த்தப்பட உள்ளது.

2011 கணக்கெடுப்பு: கிளம்பும் புதிய சர்ச்சை

இந்த இடங்கள் அதிகரிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation) பணிகள் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புதான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக 2026-க்குப் பிறகு எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், 2011 கணக்கெடுப்பை அரசு கையில் எடுத்திருப்பது தென் மாநிலங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

  • தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு: மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்த Delimitation முறையில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது.
  • வட மாநிலங்களுக்குச் சாதகம்: மக்கள்தொகை அதிகம் உள்ள உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு இது கூடுதல் இடங்களைப் பெற்றுத் தரும்.

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா விளக்கம்

“பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் இனி எவ்விதத் தாமதமும் இருக்கக்கூடாது. இது இப்போதே செயல்படுத்தப்பட வேண்டும்; இதுவே தேசத்தின் உணர்வு” என்று பிரதமர் நரேந்திர மோடி டேராடூனில் பேசியுள்ளார். இதனை வழிமொழிந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, கொள்கை வகுப்பதில் பெண்களின் பங்களிப்பு தேசத்திற்கு வலுவூட்டும் என்றும், இதனைச் செயல்படுத்த மோடி அரசு உறுதியாக இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்குத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில் அவசரகதியில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்வது ஏன் என்றும், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து மசோதாவில் தெளிவு இல்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல் பலத்தை ஒடுக்கும் இந்தத் தொகுதி மறுவரையறை முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனத் திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply