சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், குத்தகை முறையிலான நியமனங்களை தவெக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3858 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவற்றை இயக்குவதற்குத் தேவையான 18,898 பணியிடங்களில் 6,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் குத்தகை முறைப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றன.
அந்த வரிசையில் இப்போது 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர். குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துனர்களின் ஒப்பந்தக் காலம் 11 மாதங்கள் ஆகும். அவர்களுக்கு மாத ஊதியமாக அனைத்துப் படிகள், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு உள்பட ரூ.26,743 வழங்கப்படும்.
சென்னையில் அடையார், குரோம்பேட்டை, வடபழனி, தண்டையார்பேட்டை, அயனாவரம், அண்ணாநகர் பணிமனைகளுக்கு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குத்தகை முறை நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜனவரி 17-ம் தேதி கோரப்பட்டன. மொத்தம் 3297 ஓட்டுனர்கள், 1895 ஓட்டுனர்கள் என மொத்தம் 5192 பேரை நியமிப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்ப்புள்ளிகளின் முதல்கட்டமாகத் தான் இப்போது 1797 நடத்துநர்களை தேர்ந்தெடுத்து குத்தகை முறையில் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1500 நடத்துநர்கள் மற்றும் 1895 ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்து வழங்கும் ஒப்பந்தங்களும் சில நிறுவனங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால், திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்களை தவெக அரசு வழங்கியிருப்பது தான். திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை, அவற்றில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி தவெக அரசு ரத்து செய்திருக்கிறது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அவற்றை பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றிருக்கிறது. ஆனால், குத்தகை முறை பணி நியமனங்கள் தொழிலாளர்களின் உழைப்பையும், உரிமைகளையும் சுரண்டக் கூடியவை என்பதை அறிந்தும் அவற்றை தவெக அரசு தொடர்வது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும் வினா.
திமுக ஆட்சியில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்களை நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. குத்தகை முறையில் நியமிக்கப்படும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுவார்கள் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறியும். அதுமட்டுமின்றி, குத்தகை முறையில் நடைபெறும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால் தான் குத்தகை முறை பணி நியமனங்களை தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது.
2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையும், சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சமூக நீதி தான் தங்களின் முதன்மைக் கொள்கை என்றும் தவெக கூறி வருகிறது. அப்படிப்பட்ட தவெக, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத, உழைப்பைச் சுரண்டக்கூடிய குத்தகைமுறை பணி நியமனங்களை நடைமுறைப்படுத்துவது ஏன்? என்பது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுமொத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களின் எண்ணிக்கை 18,898 ஆகும். இவற்றில் திமுக ஆட்சிக் காலத்திலேயே 3,692 ஓட்டுநர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது நியமிக்கப்படும் 1,797 பேரையும் சேர்த்தால் குத்தகை பணியாளர் எண்ணிக்கை 4,989 ஆக அதிகரிக்கும். மேலும் 1,500 நடத்துனர்கள், 1,895 ஓட்டுனர்கள் நியமிக்கப்படும் போது இந்த எண்ணிக்கை 8,384 ஆக உயரும். இது மொத்த ஓட்டுநர், நடத்துனர் எண்ணிக்கையில் 45% ஆகும்.
ஒரு நிறுவனத்தில் 45% பணியாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டால், அங்கு சமூகநீதியும், சமநீதியும் எங்கிருந்து தழைக்கும்? மனித உரிமை எவ்வாறு மலரும்? என்ற வினாவுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.
அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டு எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

