“தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது” – உதயநிதி ஸ்டாலின்

Priya
629 Views
1 Min Read

“தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. திமுகவை பொறுத்தவரை பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

தொகுதி மறுவரைறையின் பாதிப்பை முதலில், இந்தியாவுக்கே கூறியவர் அன்றைய முதல்வர் ஸ்டாலின். தமிழகம் பாதிக்கக் கூடாது என திமுக ஆட்சியிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் நிமித்தமாக 7 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார் ஸ்டாலின். ஏப்ரல் 16-ல் மசோதா எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது மசோதா நகலை எரித்து, எங்கள் எதிர்ப்பைக் காட்டினோம்.

நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்படக் காரணம் திமுகதான். தமிழக எம்.பிக்களின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க மாட்டோம். ஆகவே தொகுதி மறுவரையறையை எதிர்த்து அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.

தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

33% மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக முழுமையாக வரவேற்கிறது ஆதரிக்கிறது. 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அதே சமயம் மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் 7.18 என்ற சதவிதத்தை குறைக்க அனுமதிக்கக் கூடாது. அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது” என்றார்.

இதனிடையே, இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாமக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply