தமிழகத்தில் இருந்து கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும். மேலும், கனிம வளங்கள் தொடர்ந்து தோண்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிப்படையும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தத் தடையில் தளர்வு வழங்குமாறு தமிழக அரசுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து ஜல்லிக் கற்கள் உட்பட கட்டுமானப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தகவலை அறிந்தேன்.
இந்த நடவடிக்கையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானக் கற்கள் வருவது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் கற்களை நம்பியே இருக்கின்றன.
எனவே, தற்போதைய தடையால் கேரளாவில் நடைபெற்றுவரும் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு, அவை தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென் மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய இணைப்பு, சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் முக்கியமானவை.
குறிப்பாக, விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தையும், வல்லார்பாடம் சர்வதேச கண்டெய்னர் முனையத்தையும் இணைக்கும் தடையற்ற போக்குவரத்தின் மூலம் தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் போட்டித்தன்மையும் அதிகரிக்கும்.
இயற்கை வளங்களை நிலையாகப் பாதுகாக்கும் தமிழக அரசின் கொள்கை நோக்கங்களை கேரளா பாராட்டுகிறது. அதேநேரம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் நியாயமான தேவையைக் கருத்தில்கொண்டு ஒருசமநிலையான அணுகுமுறையை உருவாக்கினால், உங்கள் கொள்கையிலும் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
எனவே, கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் ஜல்லிக் கற்களை மட்டும் தடையின்றி கொண்டு செல்ல வசதியாக, உரிய தளர்வு அல்லது சிறப்பு நடைமுறையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

