யோகி பாபு நடித்துள்ள 300-வது திரைப்படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 17-ல் வெளியாகிறது. தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி தயாரித்துள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் யோகிபாபு பேசும்போது, “இது எனது 300-வது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் அதிகம் நடிக்க வேண்டும். நான் 2016- ஆண்டில் நயன்தாரா கூடவே நடித்து விட்டேன்.
இனி எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம், கதாநாயகி அல்ல. ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம்தான் எங்கள் பூர்வீகம். நாங்கள் பிறந்தது சென்னை. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் சினிமா கஷ்டம் இல்லை. சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம்தான். நான் இந்த 24 ஆண்டு அனுபவப்பட்டு அதைத் தெரிந்திருக்கிறேன்” என்றார்.

