“தமிழகத்தில் தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடைபெறும் தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்க வந்த வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தனித்தமிழ் இயக்க விழாவில் முத்தமிழ் போற்றும் மூன்று காண்டங்கள் என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன். பிரெஞ்சு நாடு இன்றும் புதுச்சேரியை மதிக்கிறது. தமிழுக்கு புதுச்சேரி மகுடம் சூட்டியது.
தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார். அவர் கொற்றம் வாழ்க. இப்படியே கொற்றம் நீடிக்கும். திமுக பெருச்சாளி ஊழல்தான் செய்தது.
கட்சியை விமர்சிப்பது தொடர்பாக கேட்கிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. நேதாஜி காங்கிரஸை வளர்த்தார். அவர் பதவி பறிக்கப்பட்டது. கட்சி ஆரம்பித்து விமர்சித்தார். திலகர், வ.உ.சிதம்பரனார் ஆகியோரும் காங்கிரஸை வளர்த்து விமர்சித்துள்ளனர். இது வழக்கமான ஒன்று” என்றார்.
கரூர் விவகாரத்தில் மனசாட்சி இல்லாமல் ஓடி வந்தவர் என விஜய்யை விமர்சித்தீர்களே என்ற கேள்விக்கு “அன்று போகவில்லை எனச் சொன்னேன்; இன்று போகிறார் மனசாட்சி இருக்கிறது என்று சொல்கிறேன்” என்றார்.
திமுகவில் இருந்து மதிமுக விலகியதற்கு நிம்மதியாக இருக்கிறது என எம்.பி துரை வைகோ சொல்லி உள்ளாரே என்ற கேள்விக்கு, “லட்சக்கணக்கான தொண்டர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களோ அந்த நிம்மதியைத் தான் திருச்சி எம்பி வெளிப்படுத்தி உள்ளார்” எனத் தெரிவித்தார்.

