இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாது: தமிழக ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள்

Priya
8 Views
4 Min Read

“இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும்.” என சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் அர்லேகர் வாசித்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அர்லேகர் தனது உரையில் அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் தனது உரையை 39 நிமிடங்களில் நிறைவு செய்தார். அரசு உரையை எந்த மாற்றமுமின்றி ஆளுநர் வாசித்ததாகவே தெரிகிறது.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக கொண்டு, சாதி, மத, பண அரசியலை தாண்டி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் விஜய்யால் மட்டுமே முடியும் என மக்கள் முடிவு செய்து தேர்தெடுத்துள்ளனர்.

தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் செலுத்தும் வரியிலிருந்து, தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வினைப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் மாநில நலன் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழகத்துக்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். தமிழகத்துக்கான நியாயமான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதிசெய்யப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுக்காப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும். தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை இந்த அரசு மூடியுள்ளது.

கனிமவளத்துறையில் நடக்கும் ஊழல் மூலம், அந்த துறையின் வருவாய் குறைந்துள்ளது. இயற்கை வளக் கொள்ளையை தடுத்து அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட நடவடிக்கைகள் தொடரும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்துக்கு உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு கொடுத்து வருகிறது.

லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக மாற்ற அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தும். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு சாதிவாரி கணகெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிந்தவுடன், தமிழக அரசு சமூக நீதி சர்வே நடத்தும்.

மீனவர் பிரச்சினையை தீர்க்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும். 2031ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் மாறும்.

இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும். இவ்வாறு ஆளுநர் உரையில் தவெக அரசின் நிலைப்பாடுகள் பலவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply