சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சினை நிலவி வரும் நிலையில், தவெக அரசு கும்பகர்ணன் போல தூங்குகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதாந்திர வாரியாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை.
கர்நாடக முதல்வர் சிவக்குமார் மேகேதாட்டுவில் கட்டாயம் அணை கட்டியே தீருவோம் எனக்கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தற்போது காவிரி நடுவர்மன்றம் தேவையற்றது ஏனெனில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து தெளிவான தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் விஜய் சந்திக்க செல்வது தவிர்க்கப்பட வேண்டும். இது தேவையற்றது. மேகேதாட்டு அணை பிரச்சினை உணர்வுப்பூர்வமானது. இப்பிரச்சினை குறித்து தவெக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்.
தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடாவிட்டால் அதிமுக சார்பில் விவசாயிகளை திரட்டி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக முதல்வர் காவிரி நதி நீர் பிரச்சினையில் எவ்வித கருத்தும் கூறாமல் மவுன புரட்சி செய்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் வறட்சி வரும்போது வறட்சியை எப்படி கையாள்வது, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என கண் காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாங்கள் எடுத்தோம்.
சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சினை நிலவி வரும் நிலையில், தவெக அரசு கும்பகர்ணன் போல தூங்குகிறது. மின்கட்டணம் கணக்கெடுப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகம் செலுத்திஇருந்தால் அடுத்தமாதம் சரிசெய்யப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினார்.

