மத்திய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi இன்று (ஏப்ரல் 17, 2026) அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். பாஜகவின் அரசியலை “மாயஜாலம்” என்று சாடிய அவர், பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார்.
“இது மகளிர் மசோதா அல்ல”
தனது உரையைத் தொடங்கிய Rahul Gandhi, “எனது சகோதரி பிரியங்கா காந்தியின் சகோதரனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் இந்த நாட்டின் உந்துசக்தி. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா பெண்களுக்கானது அல்ல. இது இந்தியப் பெண்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பாஜகவின் வெட்கக்கேடான செயல். ஓபிசி மற்றும் பட்டியலின மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதே இந்த மசோதாவின் உண்மையான நோக்கம்,” என்று குற்றம் சாட்டினார்.
தெற்கு நோக்கிய தாக்குதல்
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை அதிகாரமற்ற மாநிலங்களாக மாற்ற பாஜக துடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “ஜம்மு – காஷ்மீரைப் போலவே அனைத்து மாநிலங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக முயல்கிறது. இந்த மசோதா தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் ஒரு தேசத் துரோக நடவடிக்கை. உண்மை கசப்பதால்தான் மத்திய அரசு அலறுகிறது,” என்றார்.
வித்தைக்காரர் மோடி
பிரதமர் மோடியை ஒரு “வித்தைக்காரர்” (Magician) என்று விமர்சித்த Rahul Gandhi, “பண மதிப்பிழப்பு போன்ற வித்தைகளைச் செய்து தேசத்தின் பொருளாதாரத்தைத் தாக்கியவர் பிரதமர். இப்போது மேஜிக் காட்டுவது போல மூன்று மசோதாக்களை ஒன்றன் மேல் ஒன்றாக மறைத்துக்கொண்டு வந்துள்ளனர். பாஜக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமே; அதுவே இந்தியா அல்ல, அதுவே ராணுவமும் அல்ல. ஆனால் பாஜகவினர் தங்களையே இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக்கொள்வது பெரிய குழப்பம்,” என்று சாடினார்.
அவையில் அமளி
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜக எம்.பி-க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பிரதமரை அவமதிப்பதாகக் கூறி ராகுலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த ராகுல், “கோழைகளைப் போல ராணுவத்தின் பின்னாலும் மக்களின் பின்னாலும் ஒளிந்துகொள்ளாமல், நேருக்கு நேர் விவாதிக்க வாருங்கள். இந்த மசோதா வீழ்வதை நீங்கள் கண்ணால் பார்ப்பீர்கள்,” எனச் சவால் விடுத்தார்.

