தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் மிக முக்கியமான தேர்தல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் Dravidian Model 2.0 ஆட்சியை உறுதி செய்யும் வரை திமுகவினருக்கு ஊண் உறக்கம் இல்லை என அவர் சூளுரைத்துள்ளார்.
முதல்வர் தனது பதிவில், “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். “வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகளே நமது தேர்தல் ஆயுதம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிறுத்திப் பேசிய அவர், அன்றைய தினம் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சின்னங்களிலும் அளிக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். “அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி மற்றும் துணிச்சல் தான் திமுகவின் அடையாளம். இந்த அடையாளத்தை மக்கள் மன்றத்தில் நிலைநாட்ட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலின் மூலம் அமையவுள்ள Dravidian Model 2.0 ஆட்சி, ஏற்கனவே அமலில் உள்ள காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற புரட்சிகரமான திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் களம் காணுங்கள். Dravidian Model 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஓய்வு என்பது கிடையாது” என முதல்வர் தனது தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். முதல்வரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் திமுகவினரால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

