ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Priya
36 Views
2 Min Read

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படும் Jal Jeevan Mission திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதியை விடுவிப்பதில் பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 1.25 கோடி கிராமப்புற வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்குச் செயல்பாட்டில் உள்ள குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கி, Jal Jeevan Mission திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை ரூ.18,123 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 101 கூட்டுக் குடிநீர் திட்டங்களும், 21,258 ஒற்றைக் கிராம குடிநீர் திட்டங்களும் அடங்கும். பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிதி நெருக்கடி காரணமாக எஞ்சிய பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

ஒன்றிய அரசு இதுவரை ரூ.5,914 கோடி மட்டுமே விடுவித்துள்ள நிலையில், இன்னும் ரூ.3,112 கோடி Jal Jeevan Mission நிதியானது நிலுவையில் உள்ளது. குறிப்பாக, 2024-25 நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,434 கோடியில், வெறும் ரூ.732 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் ஒன்றிய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். திட்டப்பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2,550 கோடியை ஏற்கனவே விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 3-வது கட்டப் பணிகள் குறித்தும் முதல்வர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார். ரூ.8,428 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு Jal Jeevan Mission கீழ் ரூ.2,283 கோடி வழங்க ஒன்றிய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், தற்போது அந்த ஆதரவிலிருந்து ஒன்றிய அரசு பின்வாங்குவது கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் (JICA) இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இவை தவிர, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 10 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை ரூ.7,590 கோடி செலவில் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டங்களுக்கு Jal Jeevan Mission 2.0-ன் கீழ் நிதி ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தின் கிராமப்புறங்களில் சமமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய, ஒன்றிய அரசு தனது நிதிப் பங்களிப்பைத் தடையின்றி வழங்க வேண்டும் என்பதே இந்த கடிதத்தின் முக்கிய நோக்கமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply