தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும், கேரளம் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர், மாவட்டத்தின் பொய்யாதநல்லூர், ராயம்புரம், செந்துறை, உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

