தேர்தல் பத்திரம் மூலம் எதிர்க்கட்சியான எங்களுக்கு கிடைத்தது அரிசயல் நன்கொடை தான், ஆனால் ஆளும் கட்சியான பாஜகவுக்கு கிடைத்தது லஞ்சப்பணம் என்று சிவகங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திர விவரங்களை வழங்குவதில் எஸ்பிஐ வங்கி காலதாமதம் செய்வதை கண்டித்து, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் சிவகங்கை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வங்கிக்குள் சென்று மேலாளரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை எடுத்து கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கி மட்டுமே பெற அனுமதி பெற்ற நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை உச்ச நீதிமன்றம் கேட்டும் 4 மாத கால அவகாசம் கேட்டிருப்பது கட்டணத்திற்கு உரியது. மொத்தம் 22 ஆயிரம் வங்கிப் பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட சில வங்கியில் நடைபெற்றுள்ள நிலையில் அதனை டிஜிட்டல் முறையில் கையாண்டு வரும் எஸ்பிஐ வங்கி தேர்தலுக்கு முன்னதாக தர மறுப்பது பாஜகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

தேர்தல் பத்திரத்தில் 90% நிதி பாஜகவிற்கு சென்றுள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நிதியை பாஜகவிற்கு வழங்கியுள்ளனர். ஆளுங்கட்சிக்கு நன்கொடை வருவதற்கும், எதிர்க்கட்சிக்கு நன்கொடை வருவதற்க்கும் வேறுபாடு உண்டு. எங்களுக்கு வந்தது அரசியல் ரீதியான நன்கொடை. பாஜகவிற்கு வந்த நன்கொடை லஞ்சம் என்று குற்றம் சாட்டினார்.

நாங்கள் மத்தியில் ஆட்சி அமைத்தால் எஸ்பிஐ வங்கி உயர் அதிகாரிகளிடம் நன்கொடை விபரங்கள் தாமதமானத்திற்கான காரணங்களை கேட்போம். மேலும், போதைப் பொருட்கள் வர்த்தகத்தை தடை செய்தால் மட்டும் குற்றச்சம்பவங்களுக்கு தீர்வு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு, ஆலோசனை மையங்கள் மூலமும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here