முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்புடன் கின்னஸ் சாதனை முயற்சி!

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க 5 லட்சம் பக்தர்கள் திரள்கின்றனர்.

By
parvathi
Parvathi is a committed Tamil news journalist who focuses on delivering authentic and impactful stories. Her work spans across politics, cinema, society, and people-driven developments, offering...
587 Views
3 Min Read
Highlights
  • மதுரை மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டம்.
  • முருகனின் அறுபடை வீடுகளின் அருட்காட்சிக்கு அமோக வரவேற்பு.
  • ஜூன் 22 மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் சமூக வலைதளங்களில் நேரலை.

மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்று, கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிஷோர் குமார், ஹிந்து முன்னணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில மாநாடுகளை நடத்துவதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னர் கரூர், திண்டுக்கல், கோவை போன்ற பகுதிகளில் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு பல்லடத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்று மகாலட்சுமி யாகமும், 1008 நாட்டு மாடுகள் மற்றும் 108 குதிரைகளை வைத்து பூஜையும் நடத்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மாநாட்டுக்கான பணிகள் தள்ளிப்போனதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் மற்றும் சென்னிமலை விவகாரங்களுக்குப் பிறகு முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற பெயரில் மதுரையில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
திருப்பதி கோயில் உலக அளவில் போற்றிப் பாதுகாக்கப்படுவது போல, முருகனின் அறுபடை வீடுகளும் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே மாநாட்டின் முக்கிய வலியுறுத்தலாக இருக்கும் என்று கிஷோர் குமார் கூறினார். மாநாட்டின் சிறப்பம்சமாக, அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், கடந்த நான்கு நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த அருட்காட்சியை தரிசித்துள்ளதாகவும், இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பக்தர்களுக்கு அறுபடை வீடுகளின் பிரசாதம் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டியிருப்பதால், அதற்குப் பதிலாக பாதாம், முந்திரி, வேர்க்கடலை ஆகியவை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் ஜூன் 22 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி கவசம் பாடத் தொடங்கியதும், அதன் வரிகள் திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், மாநாட்டிற்கு வர முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே மாலை சரியாக 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடலாம் என்றும் கிஷோர் குமார் அழைப்பு விடுத்தார். மாநாட்டிற்கு வருவோர் முன்னதாகப் பதிவு செய்ய சமூக வலைதளங்களில் ‘QR’ குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இது ஹிந்து முன்னணி சார்பில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் முன்பதிவு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தங்கள் சொந்த வாகனங்களில் வருவோர் காவல் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் தங்கள் மாவட்டங்களில் பதிவு செய்து வர வேண்டும் என்றும், அப்போதுதான் மதுரைக்குள் காவல்துறையினர் அனுமதிப்பார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.

Share This Article
Parvathi is a committed Tamil news journalist who focuses on delivering authentic and impactful stories. Her work spans across politics, cinema, society, and people-driven developments, offering readers both clarity and depth. With a strong belief in ethical journalism, Parvathi ensures every article connects with truth and relevance.
Leave a Comment

Leave a Reply