சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காஃபி, வடை, பஜ்ஜி விலை உயர்வு

Priya
35 Views
2 Min Read

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தற்போது சாமானிய மக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான Gas சிலிண்டர்கள் கிடைக்காததால், தேநீர் கடைகள் மற்றும் சிறு உணவகங்களில் விற்கப்படும் டீ, காபி, வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களின் விலையை உரிமையாளர்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுநாள் வரை 8 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வடை, பஜ்ஜி மற்றும் போண்டா போன்ற பலகாரங்களின் விலை தற்போது 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீ மற்றும் காபி விலையிலும் 2 முதல் 3 ரூபாய் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களைக் கூடுதல் விலை கொடுத்துக் கறுப்புச் சந்தையில் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாலும், போதிய விநியோகம் இல்லாததாலும் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள நிலவரப்படி, பெரும்பாலான கடைகளில் இன்னும் இரண்டு நாட்களுக்குத் தேவையான Gas சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. “எங்களிடம் இருக்கும் சிலிண்டர்களை வைத்து இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே கடையை நடத்த முடியும். அதற்குள் புதிய சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றால், வேறு வழியின்றித் தேநீர் கடைகளை முழுமையாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று திண்டுக்கல் மாவட்ட டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் உற்பத்தியைக் குறைத்து, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. இதன் நேரடிப் பாதிப்பைச் சிறு குறு வியாபாரிகள் தற்போது அனுபவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்கு, இந்தத் திடீர் Gas தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. அரசு உடனடியாகத் தலையிட்டு வர்த்தகச் சிலிண்டர்களின் விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில், அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தேநீர் கடைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply