“இனி நல்லதே நடக்கும்” – ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி நெகிழ்ச்சி

Priya
15 Views
1 Min Read

பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி இன்று நேரில் சந்தித்தார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் போக்கு இருந்த நிலையில், இருவரும் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியினரின் 61வது திருமண நாளை முன்னிட்டு, இவர்களின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி தனது குடும்பத்தினருடன், அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தைலாபுரத்தில் உள்ள இல்லத்துக்கு வருகை தந்த அன்புமணியை, ராமதாஸ் கண்ணீர் மல்க வரவேற்று கட்டியணைத்தார். இதன் பின்னர் அன்புமணி, தனது பெற்றோர்களிடம் ஆசிபெற்றார். இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “ இன்று அப்பா அம்மாவின் திருமண நாளில், குடும்பத்துடன் சென்று அவர்களின் வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டோம். இனி நல்லதே நடக்கும்” என்றார்.

2024-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த பாமக பொதுக்குழுவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது. இதன்பின்னர் இருவருக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்து, இருவரும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்களை நீக்கிக்கொண்டனர். மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக அணியில் இடம்பெற்று 4 தொகுதிகளில் வென்றது. சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ராமதாஸ் தரப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில், இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். இதனால் பாமக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் நம்புகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply