கட்சியில் வெறும் தொண்டராக அன்புமணி பணியாற்றினால் பிரச்சனை தீரும் – பாமக நிறுவனர் இராமதாசு

ansar
4231 Views
4 Min Read
4 Min Read
Highlights
  • இராமதாசு அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகள்.
  • "அன்புமணி எனது மார்பில் குத்திவிட்டார், பாஜக கூட்டணியை சௌமியாவே முடிவு செய்தார்" என்று இராமதாசு தெரிவிப்பு.
  • முகுந்தன் நியமன விவகாரம் மற்றும் பிற கட்சி விவகாரங்களில் அன்புமணி மீது குற்றச்சாட்டுகள்.
  • கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இராமதாசுவின் பேச்சு.

29.05.2025, விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் இராமதாசு செய்தியாளர்களை சந்தித்தார். அன்புமணி தனது மார்பில் குத்திவிட்டதாகவும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்த நிலையில், அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி பாஜக உடன் பாமக கூட்டணியை முடிவு செய்தார் என்றும் கூறி அதிர்ச்சி அளித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் இராமதாசு மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவராகவும் செயல்பட்ட அன்புமணிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வார்த்தைப் போர் முற்றி வருகிறது. இந்நிலையில் கட்சியினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார் பாமக நிறுவனர் இராமதாசு. இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி, மற்றும் சௌமியா அன்புமணி குறித்து பல்வேறு தகவல்களை காட்டமாக பதிவு செய்துள்ளார் இராமதாசு. இது மீண்டும் தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பி தான் செய்த தவறுகளை மறைத்து அனுதாபம் தேடவே, தருமபுரி கூட்டத்தில், தான் என்ன குற்றம் செய்தேன் என அன்புமணி பேசியிருக்கிறார் அதற்கான பதில் சொல்வது தன் கடமை என்று இராமதாசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கசப்பான வார்த்தைகளைக் கொண்ட மருந்தை பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருந்திய அவர், தனது சத்தியத்தை மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி குற்றம் செய்ததாகக் கூறினார்.

தவறான ஆட்டத்தை தொடங்கி முதுகில் அடித்தவர் அன்புமணிதான் என்றும், முகுந்தன் நியமன விவகாரத்தில், 45 ஆண்டுகால அரசியலில் கட்சிக்கு அவப்பெயரை பெற்று தந்ததால், தான் இடிந்து போய் விட்டதாகவும் இராமதாசு வருந்தினார்.
கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்த அன்புமணி, தமிழ்க்குமரன் விவகாரத்திலும், நியமன கடிதம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே அதனை கிழித்து எறிய வற்புத்திய தகவல் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

முகுந்தன் நியமனம் குறித்து பொங்கல் நேரத்தில் அவரது தாய் கேட்டபோது, ஒரு பொருளைத் தூக்கி தாய் மீது அன்புமணி அடித்ததாகக் கூறி, செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சி அளித்தார் இராமதாசு. நல்வாய்ப்பாக அது அவர் மீது படவில்லை என்று கூறிய அவர், தான் தாயை கடவுள் என்று கூறும் அன்புமணி இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் முகுந்தன விவகாரத்தில் அன்புமணி நடந்து கொண்ட விதங்களை நினைவு கூர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார் பாமக நிறுவனர் இராமதாசு.

கட்சியை அரும்பாடுபட்டு வளர்த்த தனக்கு எதிராக கட்சி நிர்வாகிகளை இயக்கும்
அன்புமணிக்கு தலைவர் பண்பு இல்லை என்று அவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட பின்புலமாக நடந்த நிகழ்வுகளையும் அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, கட்சியை இனிமேல் தான் பார்த்துக்கொள்கிறேன் என அன்புமணி கூறியதைக் கேட்டு கண்ணீர் வடித்ததாக இராமதாசு கூறினார். கட்சியை இராமதாசு பார்த்துக் கொள்ளட்டும் நீங்கள் மக்களை பாருங்கள் என கட்சியினர் கூறினார்கள் என்றும், அனால் தான் கேட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அன்புமணி நினைப்பதாகவும் கூறியதோடு, அன்புமணி கூடாமல் பொய் பேசுவார் என்றும் இராமதாசுதெரிவித்தார்.

தான் மாமல்லபுரத்தில் இருந்தபோது அன்புமணியை தலைவராக நியமிக்க சௌமியா அன்புமணி வற்புறுத்தியதால் பட்டாபிஷேகம் செய்து ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டதாக கூறிய இராமதாசு, தனக்கு விருப்பமே இல்லாமல் தான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை மத்திய அமைச்சராக்கி சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை பெற்றுத் தந்தாக தெரிவித்தார்.

இப்போது நடக்கும் குழப்பங்களுக்கு ஒரே தீர்வாக, அன்புமணி செயல் தலைவர் பதவியை முழுமையாக ஏற்று செயல்பட வேண்டும் அல்லது தொண்டராக இருந்து கட்சிக்குப் பணியாற்றட்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுமாறு அன்புமணிக்கு கடிதம் எழுதியதாகவும், அவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் என கூறிய இராமதாசு, திடீரென அதிமுக கூட்டணியை தடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அன்புமணி வற்புறுத்தினார் என்றார்.

பாஜக கூட்டணிக்காக மகனும் மருமகளும் இரு கால்களையும் பிடித்துக் கொண்டு
கதறியதாகவும், பாஜக கூட்டணி இல்லையென்றால் நீங்களே எங்களுக்கு கொள்ளி வைத்து விடுங்கள் என்று கூறி அழுததாகவும் பதிவு செய்தார். பாஜக கூட்டணியை சௌமியாவே முடிவு செய்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில பொதுக்குழு, செயற்குழு ஆகியவை கட்சி நிறுவனரால் அழைக்கப்பட்டு அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பது பைலாவில் இருக்கிறது என்றும், எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணி முடிவைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறிய இராமதாசு, மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

மாநிலங்களவை தேர்தலில் நாங்கள் சீட்டு கேட்கக் கூடாதா என்று கேள்வியெழுப்பிய பாமக நிறுவனர் இராமதாசு, தானே கூட போட்டியிடுவேன் என்றார்.

இன்று நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பு இராமதாசு மற்றும் அன்புமணி இடையேயான மோதலை இன்னும் அதிகரித்துள்ளது. இராமதாசு கூறியது போல அன்புமணி நடந்து கொண்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவாரா? அல்லது இதற்கு பதிலளிக்கும் வகையில் செயல்படுவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 45 ஆண்டுகாலமாக பயணித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் மற்றும் குடும்பத்தினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை கட்சித் தொண்டர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply