தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் தீர்ப்பு குறித்து மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தத் தேர்தல் முடிவுகள் சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்குத் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக – அதிமுக கூட்டணிக்குக் கிடைத்த படிப்பினை
திருமாவளவன் தனது அறிக்கையில், “மதவழி சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் மக்கள் வீழ்த்தியுள்ளனர். கடந்த 2021-ல் 66 இடங்களில் வென்ற அதிமுக, தற்போது பாஜகவுடன் கைகோர்த்ததால் 19 இடங்களை இழந்து 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது மதவாத சக்திகளுடன் கை கோர்ப்பவர்களுக்கு மக்கள் அளித்துள்ள பாடம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி ஆட்சி என்னும் நுட்பமான தீர்ப்பு
இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், “மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை உணர்த்துகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்டகாலமாக முன்மொழிந்து வந்த ‘கூட்டணி ஆட்சி’ என்ற கருத்தாக்கத்தைத் தமிழக மக்கள் தற்போது வழிமொழிந்துள்ளனர். மக்கள் ஒரு ஒற்றைக் கட்சியின் ஆட்சியை விட, பல்வேறு சக்திகள் உள்ளடங்கிய கூட்டணி ஆட்சியையே விரும்புகின்றனர் என்பதை இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது,” என்றார்.
திமுக மற்றும் தவெக வெற்றிகளின் பின்னணி
அதிமுக – பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கும் (தவெக) இயல்பாகப் பிரிந்து போயுள்ளதை திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அணிக்கும் தவெக-வுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் யாவும் ஒட்டுமொத்தமாக வலதுசாரி மற்றும் சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காதது அதிர்ச்சியளித்தாலும், மதவாத சக்திகள் வீழ்த்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு நன்றி
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குக் கணிசமான வெற்றிகளை வழங்கிய மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள திருமாவளவன், தமிழகம் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்வதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

