தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்றே தமிழக அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்களை 5 நாள்களுக்குள் வழங்குவதை கட்டாயமாக்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களுக்கு சேவை வழங்கும் அரசின் இந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும், இந்த அணுகுமுறை பயனளிக்காது. இதற்கான உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அரசின் முயற்சி ”புதிய மொந்தையில் பழைய கள்”ளாகவே இருக்கும்.
கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, அரசு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. பட்டா மாற்றம் போன்ற சேவைகளும் அதே துறை மூலம் தான் வழங்கப்படுகிறது. இவை மக்களுக்கு விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 26 வகையான சான்றிதழ்களை விண்ணப்பித்த 5 நாள்களுக்குள் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு வசதியாக பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ்கள் தவிர்த்த பிற சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 24 வகையான சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் வட்டாட்சியரிடம் இருந்து துணை வட்டாட்சியருக்கு மாற்றப்படவுள்ளது. இந்த முறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், அதற்கான அரசாணை ஒரு சில நாள்களில் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்; அதற்காக மக்களை அரசு அலுவலகங்களுக்கு அலைய வைக்கக்கூடாது என்பது தான் பாமக கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இதற்காக 2011ம் ஆண்டில் இருந்து பாமக தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்தின் பயனாகவே பெரும்பான்மையான சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் முறை சாத்தியமாகியுள்ளது.
ஆனாலும், அவை குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை என்பதால், அவற்றின் நிலை குறித்து அறிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலகம் என மக்கள் அலைய வேண்டிய அவலம் தொடர்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது தான். அதை விடுத்து இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதும், அரசாணைகளை எந்த வகையிலும் பயனளிக்காது. இதற்கு கடந்த கால முன்னுதாரணங்கள் உள்ளன.
தமிழக அரசு இப்போது திட்டமிடுவதைப் போலவே, முந்தைய திமுக ஆட்சியிலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 26 வகையான சான்றிதழ்களை விண்ணப்பித்த 16 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதுமட்டுமின்றி, சான்றிதழ்கள் குறித்த காலத்தில் வழங்கப்படுகின்றனவா ? என்பதை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்; அவருக்கு உதவ துணை வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமிழக அரசு இப்போது புதிதாக பிறப்பிக்கவிருக்கும் அரசாணைக்கும், முந்தைய திமுக அரசின் சுற்றறிக்கைக்கு ஏற்பட்ட அதே நிலை தான் ஏற்படும். அதற்கு காரணம் திமுக அரசின் சுற்றறிக்கையோ, தவெக அரசு பிறப்பிக்கவுள்ள அரசாணையோ வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு எந்த அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்காது. அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கு சான்றிதழ்களும் கிடைக்காது. காரணம்… குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ்களை வழங்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசின் சுற்றறிக்கையிலோ, தவெக அரசின் ஆணையிலோ வகை செய்யப்படவில்லை என்பது தான்.
மாறாக, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும், சேவை வழங்காத அதிகாரிக்கு தண்டம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள். இது தான் மக்களுக்குத் தேவை. தமிழக அரசு நினைத்தால் இப்படி ஒரு சட்டத்தை மிக எளிதாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியும். இதை அரசு செய்ய வேண்டும்.
இந்தியாவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டு, அது வலிமையானதாக இல்லை என்று கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால், 100 நாள்களில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அளித்த அந்த வாக்குறுதியை அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
அரசு வழங்கும் சேவைகள் மக்களுக்கு குறித்த காலத்திற்குள் சென்றடைய வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தக் கடமையையும், தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில், தவெக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்றே தமிழக அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

