“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? வெட்கக்கேடு.
‘நான் உங்கள் அண்ணன்’ என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய், முதலில் இப்புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

