உதவிப் பேராசியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் நடத்திய தகுதித் தேர்வுக்கான பணியிடங்களை 4,000-ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசியர் பணியிடங்களுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தகுதித் தேர்வுக்கான முடிவுகளை ஜூன் மாத இறுதியில் ஆசிரியர் தகுதி வாரியம் வெளியிடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாக இருந்த கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்பான வழக்கை கடந்த மே மாதமே சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், ஏற்கனவே அறிவித்த 2,708 உதவிப் பேராசியர் பணியிடங்களுடன் மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் சேர்த்து, 4,000 காலிப் பணியிடங்களாக உயர்த்தி, உதவிப்பேராசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
இதனால், பேராசிரியராகும் கனவோடு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கும் பயனளிக்கும். காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட்டு அரசுக் கல்லூரி மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
எனவே, தமிழக உயர்க்கல்வியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் மாதம் நடத்திய தகுதித் தேர்வுக்கான பணியிடங்களை 4,000-ஆக அதிகரிக்க வேண்டும் என முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

