இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஒவ்வொரு ஆண்டு சுமார் 24 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் முறையில் இருந்த தளர்வை நீக்கி, பழைய முறையில் இந்தாண்டு தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இதனால் நீட் தேர்வு வினாத்தாளில் அனைத்து கேள்விகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடக்க உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் தேசிய தேர்வு முகமை (NTA) மாற்றியுள்ளது. அதாவது, கொரோனா காலத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் முறையில் இருந்த தளர்வை நீக்கி, பழைய முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறையில் மாற்றம்
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாயமில்லாத கேள்விகள் மற்றும் கூடுதல் நேரம் ஆகியவை இனி கிடையாது என குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பழைய தேர்வு முறைப்படி இந்தாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
180 கேள்விகளும் கட்டாயம்
நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்படுகிறது. எனவே கேட்கப்படும் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள் மற்றும் உயிரியலில் 90 என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும்.
நேரம் குறைப்பு
நீட் தேர்வு நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 180 நிமிடங்கள் அதாவது 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவில் APAAR ID மற்றும ஆதார் கட்டாயம் என்று முதலில் அறிக்கை வெளியிட்ட நிலையில், APAAR ID கட்டாயமில்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதே போன்று, நீட் தேர்வு கணினி முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓஎம்ஆர் தாளில் பேனா மற்றும் பேப்பர் முறையில் ஒரே நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை விண்ணப்பப் பதிவு தொடங்கவில்லை மற்றும் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமாக எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 56 ஆயிரம் இடங்கள் அரசு கல்லூரிகளிலும், 52 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளில் இருக்கின்றன.
மேலும், சித்தா, யுனானி, ஆயுர்வேத, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.