“அரசுகளை அலறவிடும் ஏஐ அல்காரிதம்” – ராம் கோபால் வர்மா விவரிப்பு

Priya
365 Views
2 Min Read

“மனிதனுக்கு மனிதன் செய்யும் நன்மைகளை விட செயற்கை நுண்ணறிவு அதிகமான நன்மைகளை மனிதனுக்குச் செய்யும்” என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘அரசுகளை அழிக்கும் செயற்கை நுண்ணறிவு’ என்று தலைப்பிட்டு நீண்ட பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தற்போதுள்ள நடைமுறையில் அரசியல் வர்கத்தினர், நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளை கட்டுப்படுத்தி அரசை நிர்வகிக்கின்றனர். மக்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசியல் தலைவர்கள் தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள். வழிமுறைகளை பின்பற்றி அரசாங்கத்தை நடத்த அதிகாரிகள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். இந்த ஒட்டுமொத்த ஏற்பாடுகளும் நேர்மை, துணிவு என்கிற மனிதப் பண்புகளால் அளவிடப்படுகிறது.

ஆனால், அதிகாரிகளின் தலைக்கு மேல் பணி இடமாற்றம் எனும் கத்தி தொங்கும். ஒரு போன் காலில் தன்னை அழிக்கக்கூடிய அரசியல் தலைவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சராசரி மனிதர்களே அவர்கள். ஆகவே விதிகள் வளைக்கப்படுகின்றன. பணம் கொடுத்தால் கோப்புகள் நகர்கின்றன. மருமகனுக்காகவோ, சரியான காண்ட்ராக்டர் கிடைக்கும் வரையிலோ முடிவுகள் தாமதப்படுத்தபடுகின்றன.

இப்போது அதிகாரியின் இடத்தில் செயற்கை நுண்ணறிவை வையுங்கள். அல்காரிதத்துக்கு நீங்கள் லஞ்சம் கொடுக்க முடியாது. பணி இடமாற்றம் என மிரட்ட முடியாது. நள்ளிரவில் கூப்பிட்டு மருமகனுக்கு காண்ட்ராக்ட் கேட்க முடியாது. செயற்கை நுண்ணறிவுக்கு குடும்பம் கிடையாது.

துபாயில் காவலர்கள் இல்லாத ஸ்மார்ட் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

உள்ளூர் அதிகாரி தந்த தகவலின் அடிப்படையில் எம்எல்ஏ ஒருவர் சட்டபேரவையில் தங்கள் பகுதியில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி ஒரு குறிப்பிட்ட பூச்சி மருந்தை வாங்க வலியுறுத்துகிறார் என்று வைத்து கொள்வோம். உடனே எதிர்தரப்பு எம்எல்ஏ அந்த தகவல் திரிக்கப்பட்டவை. எம்எல்ஏவின் மருமகன் பூச்சி மருந்து தொழிற்சாலை வைத்திருக்கிறார் என குற்றம்சாட்டுவார். உண்மையை வாக்காளர்கள் அறியமுடியாது.

இப்போது எம்எல்ஏ இடத்தில் செயற்கை நுண்ணறிவை வையுங்கள். அதற்கு எந்த அதிகாரியின் உதவியும் தேவையில்லை. அது, செயற்கைகோள் படம், மண்வள அறிக்கை, மழைப் பொழிவு, சர்வதேச சந்தை விலை, 15 ஆண்டு கால ஒப்பீட்டுத் தகவல் என எல்லாவற்றையும் கொடுத்துவிடும். அதனை மறுக்க முடியாது.

வாக்காளர் பிரச்சினைக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடையில் தரகர் போல அரசியல்வாதி நிற்கிறார். செயற்கை நுண்ணறிவு அரசு இயந்திரத்தை வெளிப்படையான, ஊழலற்ற ஒன்றாக மாற்றிவிட்டால் இடையில் தரகர் மதிப்பிழக்கிறார்.

பொறுப்புக்கூறல், மனித நீதி என அரசியல்வாதிகள் கூச்சலிடலாம். தங்களின் அதிகாரம் பறிபோகுமே என்கிற பயம் அவர்களுக்கு. வருங்காலத்தில் அரசு கவிழ்க்கப்படாது. அவை அல்காரிதம்களால் கையகப்படுத்தபடும்.

ஆம்… பொருளாதார வளர்ச்சியை பற்றியதுதானே அரசு. ராணுவத்துக்கான செலவை விட சுகாதாரத்துக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்பது பற்றியதும்தானே.

செயற்கை நுண்ணறிவு மனிதன் இல்லை. ஆனால், மனிதனை விட அதிகமான நன்மைகளை மனிதர்களுக்குச் செய்யும்” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply