சென்னை: புதிய கல்விக்கொள்கையை (NEP) தமிழ்நாடு அரசு ஏற்காததால், பள்ளிக்கல்வி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏன் தொடர்ந்து எதிர்க்கிறது? இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் நெடிய வரலாறு என்ன? விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதி நிலுவையில் உள்ளது. இந்த நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், இந்த நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களுக்காகவே என்றும், இது தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழிக்கு எதிரானது அல்ல என்றும், பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படும்போது, தமிழ்நாடு மட்டும் ஏன் எதிர்க்கிறது என கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க. சார்பில் மும்மொழித் திணிப்பைக் கண்டித்து போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு நீண்ட காலமாகவே இரு மொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றி வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையானது, மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழ்நாடு அரசு கருதுகிறது. இந்தப் பின்னணியில் தான் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டிற்கு ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டது.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937-1940):
தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்பும் முயற்சிகள் 1918-ல் தொடங்கினாலும், அரசியல் ரீதியான எதிர்ப்பு 1937-ல் துவங்கியது. ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது இதற்குத் தூண்டுதலாக அமைந்தது. தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களும், மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்கள், பேரணிகள் நடந்தன. போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். நடராசன், தாளமுத்து என இருவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்தனர். இரண்டாம் உலகப் போர் சூழலில், ராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, கட்டாய இந்தி ரத்து செய்யப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாவது கட்டாய இந்தி முயற்சி (1948-1949):
சுதந்திரத்திற்குப் பிறகு, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது மீண்டும் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அறிவிப்பு வெளியானது. ஆரம்பத்தில் விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டாலும், பின்னர் கட்டாயமாக்கப்பட்டது. அண்ணா தலைமையில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. பெரியார், அண்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜர், இந்தி கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நிலையில், ஓமந்தூரார் பதவி விலகினார். பின்னர் கட்டாய இந்தி நீக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.
மூன்றாவது முயற்சி (1950):
பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தபோது மீண்டும் ஒருமுறை இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க.வின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்ட அறிவிப்பால் இந்த முடிவு விரைவாகத் திரும்பப் பெறப்பட்டது.
அலுவல் மொழி இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1965):
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே ஒன்றியத்தின் அலுவல் மொழியாகும் என்ற நிலை ஏற்பட்டது. ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக தொடர 1963ல் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், ‘தொடரலாம்’ என்ற வாசகத்திற்கு தி.மு.க. ‘தொடரும்’ என திருத்தம் கோரியது. 1965 காலக்கெடு நெருங்க, இந்தி பேசாத மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் போராட்டக்களத்தில் இறங்கினர். காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். தீக்குளிப்புச் சம்பவங்களும் அரங்கேறின. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்கும் என உறுதி அளித்த பின்னரே போராட்டம் தணிந்தது.
புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு (1986):
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை மற்றும் நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கும் அறிவிப்பு இந்தி திணிப்பு முயற்சி என தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் தி.மு.க. மீண்டும் போராட்டம் நடத்தியது. மு. கருணாநிதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படாது என ராஜீவ் காந்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படவில்லை.
இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே, தற்போது புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. இந்த நீண்ட வரலாற்றின் பின்னணியிலேயே, கல்வி நிதியை நிறுத்தி இந்தி/மும்மொழித் திணிப்பை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயல்வதாக தமிழ்நாடு அரசு கருதுகிறது. இதனைக் கண்டித்தும், நிலுவையில் உள்ள நிதியைப் பெறவும் ஆளுநர் விவகாரம் போல சட்ட ரீதியாக அணுக தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.