சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரைக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.2,559 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்து, 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர், ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மீது விமர்சனம்: “தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே கூறுகின்றன. ஆனால், பிரதமர் தேர்தலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பேசி வருகிறார். ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருப்பதையும் பிடிக்காது,” என முதல்வர் சாடினார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 40% நிதியை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை மூலம் கிராமப்புற மக்களை ஒன்றிய அரசு கைகழுவி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதில்: தமிழகத்தின் வளர்ச்சியை ஆளுநர் விமர்சிப்பதையும், அதே சமயம் ஒன்றிய அரசு பாராட்டுவதையும் சுட்டிக்காட்டிய முதல்வர், “ஆளுநரும் பிரதமரும் முதலில் அவர்கள் துறை சார்ந்த தரவுகளைப் படிக்க வேண்டும்” என்றார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி, “2011 மற்றும் 2016 தேர்தல் அறிக்கைகளில் சொன்ன ஒரு வாக்குறுதியையாவது அதிமுக நிறைவேற்றியதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
முக்கியத் திறப்பு விழாக்கள்:
- வேளாண் கல்லூரி: கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்ட புதிய வேளாண் கல்லூரியைத் திறந்து வைத்தார்.
- பல்நோக்கு அரங்கம்: திறக்கப்பட்ட புதிய அரங்கிற்குச் சுதந்திரப் போராட்ட வீரர் சி.சுப்பிரமணியன் பெயரைச் சூட்டினார்.
- சட்டக் கல்லூரி: கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடியில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரியை மாணவர் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- குடிநீர் திட்டம்: சிவகங்கை மாவட்டத்தின் நீண்ட காலத் தேவையான கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
“திமுக சொன்னதைச் செய்யும், செய்வதைச் சொல்லும். 2026-லும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.

