கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தவெக கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தவெக வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று ( நவம்பர் 5) நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் முதலாவதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.
இந்த பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் விவரங்கள் பின்வருமாறு;
1. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம்.
2. பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்.
3. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 35 மீனவர்கள் கைதை கண்டிக்கும் தீர்மானம்.
4. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கோரும் தீர்மானம்.
5. டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்கு காரணமான விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.
6. வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், மழை நீர் வடிகால்களை சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துமுடிக்க வேண்டும்.
7. பாதுகாக்கப்பட்ட ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்.
8. மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழக தலைவருக்கும் அவரை காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
9. கழகத்தின் மீதும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாக செயல்படுபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.
10. தமிழக தொழில்துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
11. தமிழகத்தில் ஜனநாயக அடிப்படையில் பொது பிரச்சனைகளில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்து, அவர்களின் கருத்துரிமையை சிதைக்கும் வெற்று விளம்பரமாடல் அரசுக்கு கண்டனம்.
12. கூட்டணி நிலைப்பாட்டில் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம்.
உள்ளிட்ட 12 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


